Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தகவல்களை அனுப்பத் தொடங்கிவிட்டது சந்திரயான் 2: இஸ்ரோ தலைவர் சிவன்

ஜுலை 23, 2019 09:58

புதுடெல்லி: சந்திரனின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை, இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர். சந்திரயான் 2 தகவல்களை அனுப்பத் தொடங்கிவிட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான 20 மணிநேர கவுன்ட் டவுன், ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கியது. கிரையோஜெனிக் என்ஜினில் ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன் வாயுக்கள் நேற்று காலை நிரப்பப்பட்டன. இதையடுத்து, திட்டமிட்டபடி, நேற்று மதியம் 2.43 மணிக்கு இஸ்ரோவால் பாகுபலி என வர்ணிக்கப்படும் ஜிஎஸ்எல்வி மார்க்3-எம்1 ராக்கெட் மூலம், சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

விண்ணில் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, 16 நிமிடங்களில் சந்திரயான்-2 விண்கலத்தை புவிவட்டப் பாதையில் ஜிஎஸ்எல்வி ராக்கெட் நிலைநிறுத்தியது. இதையடுத்து, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி மையத்தில் உள்ள விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை 24 மணிநேரத்தில் விஞ்ஞானிகள் சரிசெய்ததாக கூறினார்.

மிகவும் தீவிரமான தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட நிலையில், அதனை சரிசெய்து இந்தியா மீண்டுவந்து விண்கலத்தை விண்ணில் செலுத்தியுள்ளது. தொழில்நுட்பக் கோளாறை மிகவும் சிறப்பான முறையில் கண்டறிந்தவுடன், விரைந்து செயல்பட்டு ராக்கெட் இயல்பு நிலைக்கு கொண்டுவரப்பட்டது. கோளாறுகளுக்கான காரணங்களை கண்டறிந்து சரிசெய்யப்பட்டது. இவை அனைத்தும் 24 மணிநேரத்துக்குள் நடைபெற்றது.

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செலுத்தப்பட்டு 18.33 நிமிடங்களில் விண்கலத்திலிருந்து சிக்னல்கள் பெறப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, பலகட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு, 48 நாட்களில் சந்திரனின் தென் துருவத்தில் சந்திரயான்-2 மெதுவான வேகத்தில் தரையிறங்க உள்ளது. மேலும் சந்திரயான்-2 விண்கலம் செயல்படத் தொடங்கியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். சந்திரயான்-2 தற்போதே தகவல்களை அனுப்பிவருவதாகவும், சந்திரனைப் பற்றிய தகவல்களைப் பெறுவதற்கு ஒரு மாத காலம் ஆகும் என்றும் அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்